திங்கள், 16 மார்ச், 2009

யாமி

இவள் குழந்தைகளின் கண்களில்
சூரியன்
நிலவு ஈர்த்தபின் எஞ்சும் ஒளியினை
தேக்கி வைக்கிறது

நகங்களின் நுனியில் எனது இரவைக் கடத்தி
தூக்கத்தை அடர்ந்த இருள் நிலங்களில் பயிரிட்டு
கனவுகளை பிடுங்கி நடுகிறாள்

அருகம்புல் பூக்களென
அவள் நாசியோரம் நீண்டிருக்கும் ரோமங்கள் துடிக்க
கொலை செய்ய தயாராகையில்
எனக்கு துரோகம் இழைத்தவர்களை
நினைவூட்டுகிறாள்

ரகசியங்களை
ஒரு வெட்டியானைப் போல புதைத்து
அதன் வாசனைகளை மறக்கக் கூடாதென
மணல்களிடம்
மது அருந்தும் பெண்ணைப் போல பேசுகிறாள்

அவளை அருகில் அணைக்கையில்
ஏதோ ஒரு தேசத்தின் வரைபடம்
விரல்களுக்கிடையே
ஆறுதலாய் கடக்கிறது

புனர்வதெற்கென தன்னை அழைக்கும் ஆண்மைக்கு எதிரே
உடல் முழுவதும் நெருப்பு பரவ
மலைப் பாம்பென நிமிர்ந்து சீறுவாள்

என் படுக்கை அறையின் ஜன்னல் ஓரங்களில் இருந்து
ஆணிடமிருந்து வெளிப்படும் இயலாமையின் ஒப்பாரி
நெருப்பிலிட்ட இசைத் தட்டென உருகி
இரவின் முதுகில் வழியும்

முதுகுத் தண்டின் கீழ் சீரான மலை தொடர்களென
முலைகளை தாங்கி கிடக்கும் அவள் கருவறைக்குள்
பாடும் வல்லமை மிக்க புல்வெளிகள் வளருகின்றன

அவைகள் அசைவதறிகையில் எனது கருவறை
தலை கீழாய் புரள்கிறது

அப்போதெல்லாம் இனிப்பின் வாசனையரிந்து
ஊர்கிற எறும்பென
விரல்கள் அவள் அடிவயிற்றை தேடி வருடும்

யாமி
அதீத காலத்தை விடவும் இனிமை மிக்கவள்

பாதி உறக்கத்தில் அவள் இதயத்திலிருந்து வெளிப்படும் சத்தமென
பூமி என்றாவது சுழலக் கூடும்

என்னை தேடுவதற்கான அவளின் பாடலை
ஒரு மலை முகட்டின் மேல் விட்டுச் செல்ல பிரியப்படுகிறேன்

அவள் பாதத்தினடியில்
பகல்
கொய்யாப் பூவைப் போல் பூக்கிறது


written on
8.8.2005
thenmozi das
from my 3ed poem book

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக