திங்கள், 16 மார்ச், 2009

யாமி

இவள் குழந்தைகளின் கண்களில்
சூரியன்
நிலவு ஈர்த்தபின் எஞ்சும் ஒளியினை
தேக்கி வைக்கிறது

நகங்களின் நுனியில் எனது இரவைக் கடத்தி
தூக்கத்தை அடர்ந்த இருள் நிலங்களில் பயிரிட்டு
கனவுகளை பிடுங்கி நடுகிறாள்

அருகம்புல் பூக்களென
அவள் நாசியோரம் நீண்டிருக்கும் ரோமங்கள் துடிக்க
கொலை செய்ய தயாராகையில்
எனக்கு துரோகம் இழைத்தவர்களை
நினைவூட்டுகிறாள்

ரகசியங்களை
ஒரு வெட்டியானைப் போல புதைத்து
அதன் வாசனைகளை மறக்கக் கூடாதென
மணல்களிடம்
மது அருந்தும் பெண்ணைப் போல பேசுகிறாள்

அவளை அருகில் அணைக்கையில்
ஏதோ ஒரு தேசத்தின் வரைபடம்
விரல்களுக்கிடையே
ஆறுதலாய் கடக்கிறது

புனர்வதெற்கென தன்னை அழைக்கும் ஆண்மைக்கு எதிரே
உடல் முழுவதும் நெருப்பு பரவ
மலைப் பாம்பென நிமிர்ந்து சீறுவாள்

என் படுக்கை அறையின் ஜன்னல் ஓரங்களில் இருந்து
ஆணிடமிருந்து வெளிப்படும் இயலாமையின் ஒப்பாரி
நெருப்பிலிட்ட இசைத் தட்டென உருகி
இரவின் முதுகில் வழியும்

முதுகுத் தண்டின் கீழ் சீரான மலை தொடர்களென
முலைகளை தாங்கி கிடக்கும் அவள் கருவறைக்குள்
பாடும் வல்லமை மிக்க புல்வெளிகள் வளருகின்றன

அவைகள் அசைவதறிகையில் எனது கருவறை
தலை கீழாய் புரள்கிறது

அப்போதெல்லாம் இனிப்பின் வாசனையரிந்து
ஊர்கிற எறும்பென
விரல்கள் அவள் அடிவயிற்றை தேடி வருடும்

யாமி
அதீத காலத்தை விடவும் இனிமை மிக்கவள்

பாதி உறக்கத்தில் அவள் இதயத்திலிருந்து வெளிப்படும் சத்தமென
பூமி என்றாவது சுழலக் கூடும்

என்னை தேடுவதற்கான அவளின் பாடலை
ஒரு மலை முகட்டின் மேல் விட்டுச் செல்ல பிரியப்படுகிறேன்

அவள் பாதத்தினடியில்
பகல்
கொய்யாப் பூவைப் போல் பூக்கிறது


written on
8.8.2005
thenmozi das
from my 3ed poem book

வெள்ளி, 13 மார்ச், 2009

காதலிக்க நேரமில்லை

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
செய்தி அனுப்பு
ஒ..என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
ஒ..பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
ஒ..

யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ?
ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே

காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்
என் நினைவுகள் சருகுகலாகும்
அந்த நேரத்தில் மழையென வாராயோ

ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட
ஒரு சாலையில் எதிர்ப்படுவாயா
உன் காதலை சிறகென தாரையா
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?

நினைக்கும் போதென் நிழலும் ஏனோ சுடுதே


Thenmozidas poem - insomnia


Insomnia


Restlessly my veins keep talking about the

Wild creepers that are scattered around.

No one knew

That blood had turned green inside my veins.

I am whispering this prayer

sitting on the stone rock

gripping with both my knees.

Like birds feeling the dusk

When darkness blossoms

On the grass meadows

the dew drops quiver.

Lily flower waits

Searching something in the stream.

Scattered pebbles on the shore resemble lips.

I embrace them

Taste them

And bathe in their kisses.

They aren’t like the lips Of the male who abandoned me in loneliness - They are frozen winter.

I wish to sleep - My face Resting on the chest dense with trees.

The mountain turns its side eastward.


Translated from Tamil by Rajaram Brammarajan

ஆணுலகப் பதற்றம் - சுகுமாரன்

தேன்மொழி தாசின் 'ஒளியறியாக் காட்டுக்குள்' கவிதை நூலை இங்கேவெளியிட்டுப் பேசக் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய நீண்ட கால நண்பர் ராஜ மார்த்தாண்டன் நூலைப் பெற்றுக் கொள்கிறார் என்பது தனிப்பட்ட மகிழ்ச்சிக்குக் காரணம். இந்த மகிழ்ச்சிதரும் நிமிடங்களுக்காக காலச்சுவடு பதிப்பகத்துக்கும் கடவு அமைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மலையாளப் பெண் கவிஞர் ஒருவருடன் எனக்கு நல்ல தோழமையுண்டு.அண்மையில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சம்பவத்தைவிவரித்தார். தமிழில் இன்று எழுதுபவர்களில் முக்கியமான பெண் கவிஞர்ஒருவர் மலையாளக் கவிஞரைத் தொடர்புகொண்டு ஓர் அறிக்கையில்கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். எழுத்தில்ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு எதிராக ஆண்கள் நடத்தும்தந்திரங்களைக் கண்டிப்பதாக அந்த அறிக்கை இருக்கும் என்றும்தெரிவித்திருக்கிறார். ஆண் கவிஞர்கள் செய்யும் தந்திரங்களையும் பட்டியலிட்டிருந்தார்.1. பெண்ணின் பெயரைப் புனைபெயராகச் சூட்டிக்கொள்ளுகிறார்கள்.2. பாலியல் உறுப்புகளைப் பற்றிய குறிப்புகளையும் அந்தரங்கமானதருணங்களையும் பற்றி பட்டவர்த்தனமாகப் பெண் பெயரில் எழுதிபெண் கவிஞர்களைப் பற்றிய கீழான சித்திரத்தை உருவாக்க முயற்சிசெய்கிறார்கள்.3.நேர்காணல்களில் பெண் கவிஞர்களைப் பற்றிய அவதூறுகளைப்அவிழ்த்து விடுகிறார்கள்.அந்தப் பட்டியலில் இருந்த புகார்களில் இந்த மூன்றுக்கும் முதன்மைகற்பிக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு எதிராகத்தான் அந்த கண்டன அறிக்கை.அதில் மலையாளக் கவிஞரும் கையொப்பமிட வேண்டும் என்றுதமிழ்க் கவிஞர் கேட்டுக்கொண்டிருந்தார். மேலோட்டமான பார்வைக்குஇந்தப் புகார்கள் நியாயமாவை என்றே தோன்றின. ஆனால் அவற்றைநடைமுறைப்படுத்துவது அசாத்தியம். ஒரு கவிஞனை இன்ன புனைபெயரில்தான் எழுத வேண்டுமென்று வற்புறுத்துவது எப்படி? இன்ன விஷயத்தைத்தான் எழுதவேண்டுமென்று கட்டாயப்படுத்துவது எப்படி?ஒரு நேர்காணலில் இதைத்தான் பேச வேண்டுமென்று நிர்ப்பந்திக்க முடியுமா? இந்தக் கேள்விகள் எழுந்தபோது கண்டன அறிக்கை பற்றிய யோசனையையும் கைவிட வேண்டியதாயிற்று.இது இலக்கியப் பிரச்சனையல்ல. இலக்கியம் சார்ந்த அரசியலின் பிரச்சனை. படைப்பு ஆற்றல் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. இயல்பானது. ஆனால் இதுகாறும் படைப்பு வெளியை ஆண் மையமான சிந்தனைகளே ஆக்கிரமித்திருந்த சூழலில் பெண்கள் நுழைந்து விட்டார்களே என்ற ஆணுலகப் பதற்றம்தான் இதற்குக் காரணம். இந்தசவாலான தருணத்தில் தான் தமிழில் பெண் படைப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெண்களின் படைப்புகள் அதிக எண்ணிக்கையிலும் அதிக வீச்சுடனும் வெளியாகும்போது இதுவரை உருவாக்கப் பட்ட இலக்கிய விதிகள் கைவிடப்படநேரும். இலக்கியத்தில் ஒரு புதிய அழகும் ஆற்றலும் உருவாகும் என்று எண்ணுகிறேன்.அந்தப் புதிய அழகின், புதிய ஆற்றலின் அடையாளமாகவே தேன்மொழிதாசின் கவிதைகளைக் கருதுகிறேன்.சமீப காலமாக எனக்கு வாசிக்கக் கிடைத்த கவிதைத் தொகுப்புகளில்பெரும்பாலானவை பெண் கவிஞர்களின் தொகுப்புகளாகவே இருந்தனஎன்பது இப்போது நினைவுக்கு வருகிறது. புத்தக வெளியீடுகளில்வெளியிட்டும் அறிமுகப்படுத்தியும் பேசக் கிடைத்தவையும் பெண்களின்கவிதைகளாகவே இருந்தன. தேன்மொழியின் இந்தத் தொகுப்பு உட்பட.கவிதையைப் பாகுபடுத்துவதை மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால்நடைமுறையில் அப்படி ஒரு பாகுபாடு நிலவுவதை அறிவு சுட்டிக் காட்டுகிறது. அதனால் அதை ஏற்றுக் கொண்டே வாசிப்பில் ஈடுபடவும்நேர்கிறது.இதுவரை ஆண் மையக் கருத்துக்களாலும் கற்பனைகளாலும்கட்டமைக்கப்பட்டிருந்த மொழிக்கு மாற்றாக புதிய மொழியை பெண்கள்உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உருவாக்கத்தின் சாரத்தில் கருத்துகளும் புதிய படிமங்களும் சிந்தனைகளும் தானே உருவாகின்றன. சங்க இலக்கியப் பாடல் ஒன்றை மேற்கோளாகச் சொல்ல விரும்புகிறேன். ஈமக் கலம் செய்பவனை முன்னிருந்திச் சொல்லப்படும் கவிதையில் இறந்து போன கணவனுக்காகச் செய்யப்படும் தாழியில்தனக்கும் இடம் வேண்டும் என்று ஒரு மனைவி கேட்பதாக வருகிறது. இது ஓர் ஆண் மனைவியை அடக்கம் செய்யும் தாழியில் தனக்கும் இடம் வேண்டுமென்று கேட்பதாக எழுதப் பட்டிருக்க முடியாதா என்று குதர்க்கமாக யோசித்துப் பார்த்தேன். வாய்ப்பே இல்லை. காரணம், கவிதை சொல்லும் பெண்ணின் சொந்த அனுபவத்திலிருந்து உருவான ஒரு சித்திரம். வண்டிச் சக்கரத்தின் ஆரக் காலில் ஒட்டிக்கொண்டிருந்தபல்லிபோல என் கணவனுடன் நெடுந்தூரம் கடந்திருக்கிறேன். இந்தப் படிமத்தை ஓர் ஆண் மனம் உருவாக்கியிருக்கமுடியாது என்று தோன்றுகிறது. படிமத்தைச் சார்ந்து அந்தப் பெண்ணின்வாழ்வும் மொழியும் துலங்குகின்றன. தமிழில் பெண் கவிதையில் சாத்தியமாக வேண்டியது இந்த படைப்புச் செயல்தான் என்று கருதுகிறேன். அப்படியான செயல்பாட்டில் நம்முடைய கவிதை மேலும்செழுமையடையும். அதற்கான துடிப்பை எல்லாக் கவிஞர்களிடமும்தேடுகிறேன் - தேன்மொழி தாசின் கவிதைகளிலும் என்னுடைய தேடல்அதுவாகத் தான் இருந்தது. அந்தத் துடிப்புள்ள கணிசமான கவிதைகள்எனக்குக் கிடைத்தன என்பது நிறைவளித்தது.வாழ்வின் பெரும் துக்கத்தையும் தனிமையையும் காதலையும் மரணத்தையும் தேன்மொழியின் கவிதைகள் பேசுகின்றன. சமகாலக் கவிதைகள்எல்லாமும் இந்தப் பொருட்களைப் பேசுகின்றன.தன்னுடைய அனுபவமும்மொழியும் இழையும் தனித்துவமான குரலில் பேசுகிறார் தேன்மொழி.அப்படியான தனித்துவம் அதிகமும் தென்படுவது அவரது இந்தமூன்றாம் தொகுதியில்தான் என்று நான் கருதுகிறேன்.தனிப்பட்ட மூன்று காரணங்களுக்காக இந்தத் தொகுப்பு எனக்குமகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. என்னுடைய கவிதை மொழியைக் கட்டமைத்த சில் அடிப்படைக் கூறுகள் தேன்மொழியின் கவிதைகளிலும்தென்பட்டன.ஒன்று: இயற்கை சார்ந்த ஒரு மனநிலை. குறிப்பாக மலைப் பிரதேசத்தின்சூழல். 'நான் போகுமிடங்களில் மலைகள் காத்திருக்கின்றன அல்லதுமலைகள் காத்திருக்கும் இடங்களுக்கே நான் போகிறேன்' என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளெழுச்சியுடன் எழுதிய வரிகளின் வெவ்வேறுதளங்களை இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் வாசித்தேன்.தைலவாசனையுள்ள காற்றும் பனி கவிந்த நிலக்காட்சிகளும் உண்ணி பூக்கள்மலர்ந்திருக்கும் வழிகளும் என்னுடைய அந்தரங்கமான மனக் காட்சிகளைநினைவு படுத்தின என்ற நிறைவு அந்த வாசிப்பில் எனக்குக் கிடைத்தது.இயற்கையை இன்றைய கவிதைகள் மோஸ்தராகச் சித்தரிக்கும் சூழலில்தேன்மொழி அதை தனது பகுதியாகவும் தன்னை அதன் பகுதியாகவும்இயல்பாகக் கருதுகிறார் என்பது தனிப்பட்ட ரசனைக்கு ஏற்புடையதாக இருந்தது.பெண்ணியம் என்ற முழக்கமில்லாமல் பெண் நிலையிலிருந்து உணர்ந்தஅனுபங்களையே தேன்மொழியின் கவிதைகள் முன்வைக்கின்றன.அதில்பெண்ணின் நிலைக்கு ஆண் படவாக்கள்தாம் காரணம் என்ற உரத்தபுகார் இல்லாமலிருப்பது நிறைவு தந்த இரண்டாவது அம்சம்.தொகுதியின் பல கவிதைகளில் விவிலியத்தின் மொழி இழைந்து கிடப்பதுஎன்னைக் கவர்ந்த மூன்றாவது அம்சம். மனிதக் கற்பனையின் உச்சகட்டகவிதைச் சாத்தியங்களைக் கொண்ட மொழி விவிலியத்தினுடையதுஎன்பது என்னுடைய கருத்து. அதன் கசிவையாவது என்னுடையகவிதை மொழியில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற பேராசைஎனக்கும் உண்டு. தேன்மொழி கவிதைகளில் அதே பேராசை தொனிப்பதைக் காணும்போது ஓர் ஒற்றுமை உணர்வு ஏற்படுகிறது. அது இந்தக் கவிதைகளை நெருக்கமாக உணரச் செய்கிறது.

காலச்சுவடு பதிப்பகம் மதுரையில் 27 01.2008 அன்று நட்த்திய10 நூல்கள் வெளியீட்டு விழாவில் தேன்மொழி தாசின் 'ஒளியறியாக்காட்டுக்குள்' கவிதை நூலை வெளியிட்டு ஆற்றிய உரை.

நீ உன் வீடு


இந்நேரம் நீ

உன் வீட்டை அடைந்திருப்பாய்

நீ விட்டுச்சென்ற இடத்திலிருந்து

நமக்கான வீட்டின் வரைபடமொன்றை

வரைந்து கொண்டிருக்கிறேன்

நான்

ஜாதி


என் உயிர்க்கொடி அறுத்து

ஜாதிக்கொடி போர்த்தியபோது

நான் தூங்கியிருக்கக் கூடாது

கவிதைகள்

மனதின் பள்ளத் தாக்கில் இருந்துகவிதைகள் ஊர்ந்து விரல்களை எட்டும் முன்நடுங்கி மரித்து விறைக்கின்றனபின் அவை பாறைகளாய் இறுகியதுக்கங்களில் நசுங்கியோகாற்றாய் அலைகிற நினைவுகளில் தடுக்கியோதூக்கமாற்ற முகாந்தரங்களின் கொடிதனில் தொங்கியோகொலை செய்யப்பட்ட கவிஞனின்நிராசைமிக்க கவிதை வரிகளைக்கொண்டு வறுகின்றனஅவ் வரிகளில் எல்லாம்மரணத்தினும் பாழடைந்த தன்மைபடிந்திருப்பதகவே உணர்கிறேன்.

- தேன்மொழி தாஸ்

இலையுதிர்கால அந்தி ஒன்றில்


இலையுதிர்கால அந்தி ஒன்றில்
என் நிழல்

ஒரு குச்சிப் பூச்சியைப்போல்
செத்துப்போனது.

- தேன்மொழி தாஸ்

ஆராரோ


நிழலுள்ள செடிகளை அறியாத காளானைப் போல்
காட்டில் அமர்கிறேன்
மரங்கள் புலம்புகின்றன

கூர்மையான நகங்கள் கொண்ட கால்களால்
காற்று இல்லைகளில் நடப்பது பற்றி

சருகுகளோ உதிரும் போது
காற்றின் பாதச்சுவடுகளை கண்களாக்கிவிட்டுச் சாகின்றன

அப்போதெல்லாம்
நிர்வானப்படுத்த முடியாத காட்டு மரங்களின் ஆடைகளை
முத்தமிடுகிறேன்

நதியின் துளிகள்
மரங்களின் சதைக்குள் நீல நிறத்தில் இல்லை
ரத்தமென உயிர் வலிமை குன்றியதுமில்லை

ஆராரோ என்ற சொல் காட்டுப் பூக்களின் வாசனை என்றும்
ஆரிரோ என்ற சொல் மான்களின் விழி என்றும்
நான் யாரிடம் சொல்வது

அங்கங்கே நீண்டு கொண்டிருக்கும்
மரங்களின் கரங்களை அணைத்து
பைத்தியக்க் காரியைப்போல் இவற்றை பாடி அலைகிறேன்
மரங்கள் உறங்குகின்றன

விடியற்காலையில்
காட்டுக்குள் வீழும் ஒளிக்கற்றைகள்
மரங்களின் புருவங்களாகின்றன.

- தேன்மொழி தாஸ்

இருத்தல்


நான் வாழ்வதற்கான இடம்
இருக்கிறது
வாழ்ந்துகொண்டிருக்கிற இடம் அல்ல அது

எழுக தமிழினம் வெல்க தமிழீழம்

எங்கள் கெபிகளை
என்றும் சிலந்திகள் கூட
வலை நெய்து அடைக்கப் போவதில்லை

நீர்க்கால்கள் எம்மண்ணை
பிரித்துப் பார்க்கப் பழகி
ஆண்டுகள் ஆகிவிட்டன

ரத்தம் வழிந்தோடும் இடமெல்லாம்
யுத்தம் என்ற முழக்கம்
எங்கள் குரல்வளைகளில் குடியேறிவிட்டன

அகரமும் இகரமும் ழகரமும் எங்கள் மொழியழகு
நீ எழுதிப்பழகவே யுகம் வேண்டும்
தமிழினத்தின் ஆன்ம எழில்
ஆயுதத்தால் சாகாது
உங்களால் எங்கள்
ஆயுத எழுத்தைக் கூட அழிக்க இயலாது

நதிகள் கொந்தளித்து சிங்களத் தீவுகள் நகர்ந்து வந்தாலும்
பயப்பட தமிழன் புல்லுக்கு பூவாய் பிறக்கவில்லை

வீசிய குண்டுகளால்
குடல் நடுச்சாலையில் சிதறிய பின்னும்
நாங்கள் நக்கிப் பிழைக்கவில்லை

உணவோடு ரத்தமும் தண்ணீருமாய் பிசைந்து தின்று திரியும் விரல்கள் சோறு தின்னும் சுதந்திர காலம் வரைத் துடிக்கும்

பூனையின் காலில் அகப்பட்ட ஒனானின் தவிப்பாய்
எத்தனை ஆண்டுகள் எம்மக்களுக்கு

விளையாட உயிர்
அள்ளி இறைக்க தமிழச்சிகளின் அங்கம்
மிதியடிகளை சிதற பிடரிகள்
காறித் துப்ப கருவறை வழிகள்
சிங்களச் சிறுவனுக்கும் சுட்டுப் பழக தமிழர் நெஞ்சு

உங்கள் ஆயிரம் சிப்பாய்கள்
ஒரு தமிழனின் ..........
எம் இனம் எழுந்தால் சிங்களத் தீவுகளுக்குப் பாலம் இராது

மண் மனிதர்களுக்குத்தான் முதலில் என
ரத்தம் கேட்கும் காளியின் நாக்குகளை அறுத்து எரிந்து
கடவுள்களையே தள்ளி வைத்தோம் எம் மண்ணை பிச்சை கேட்கும் இனத்திற்கு வரலாறு எழுதும்வரை
வைகை ஆற்றங்கரையில் குடைபிடித்துக் கொண்டு நிற்கமாட்டோம்

போராடும் போராளிகள் புதைக்கப்படும் இடத்திலிருந்து
வெறும் காலடித்தடங்கள் புறப்படுவதில்லை

மலை முகடுகள் மேலே பருந்துகள் பறந்தால் கூட
மரணமா தோழா எனப் பதைக்கும் எம் மக்கள்
இனவிடுதலை கொடி நோக்கி
அண்ணாந்து பார்க்கும் நாள் வரும்

எங்கள் கெபிகளை
என்றும்
சிலந்திகள் கூட வலை நெய்து அடைக்கப் போவதில்லை


தேன்மொழி தாஸ்